நீதிமன்றத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக, நீதி கேட்டு மக்கள் இறைவனை வேண்டுகையில், அந்த இறைவனே இறங்கி வந்து போராடினால் எப்படி இருக்கும்? இதுதான் 'கருப்பு' படத்தின் மையக்கரு. கேரளாவைச் சேர்ந்த தந்தையும் மகளும் சென்னைக்கு வந்து இறங்கியதும், ஒரு மர்ம கும்பலிடம் 60 சவரன் நகையை இழக்கின்றனர். இந்த நகையை மீட்க, சென்னை மாவட்ட நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பேராசை வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜியை அணுகுகின்றனர். ஆனால், அவர் அவர்களை ஏமாற்றி அலைக்கழிக்கிறார்.
நம்பிக்கை இழந்த அந்த முதியவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் வேண்டுகிறார். அதன் பிறகு, வேட்டை கருப்பனாக களமிறங்கும் சூர்யா, எதிரிகளை துவம்சம் செய்கிறார். பின்னர், மனித உருவம் எடுத்து சரவணன் என்ற வழக்கறிஞராக நீதிமன்றத்தில் நுழையும் சூர்யா, வில்லன் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஒரு சவால் விடுகிறார். இந்த சவாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சூர்யா நீதி பெற்றுத் தந்தாரா என்பதை திரையில் காண வேண்டும்.
சூர்யாவுக்கு இது ஒரு சிறந்த கம்பேக்! கடைசி சில படங்களில் அவர் ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'கருப்பு' படத்தில் ஒரு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படம் தொடங்கி சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு சூர்யா என்ட்ரி கொடுத்தாலும், அவரது கதாபாத்திரத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அளவுக்கு ஆரம்ப காட்சிகள் கச்சிதமாக அமைந்துள்ளன. 'மூக்குத்தி அம்மன்' படத்தில் மூடநம்பிக்கைகளை தோலுரித்த ஆர்.ஜே.பாலாஜி, இந்த முறை நீதித்துறையில் நடக்கும் ஊழல்களை மையப்படுத்தி ஒரு கடவுள் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். சூர்யாவுக்காக வைக்கப்பட்ட அதீத மாஸ் காட்சிகள் கூட மனதில் உறுத்தாமல் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் நுணுக்கமான காட்சிகளும் கவனிக்கத்தக்கவை. நீதிமன்றத்தில் ஒரு மூதாட்டிக்கு இருக்கை மறுக்கப்படுவதிலிருந்து, 30 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் நீதிமன்ற வளாகத்தில் வேலை செய்வது வரை, சூழல் எப்படி மனிதர்களை மாற்றுகிறது என்பதை அழகாக சித்தரிக்கிறது. இந்த சின்ன சின்ன இடங்களில் ஆர்.ஜே.பாலாஜி இயக்குநராக தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சூர்யாவின் பழைய படங்களின் குறிப்புகள் வரும் இடங்களில் தியேட்டர் அதிர்கிறது. சூர்யாவுக்கு கருப்பசாமி கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, நட்டி, மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆனால், படத்தின் முதல் பாதியில் இருந்த உணர்வுப்பூர்வமான ஆழத்தை இரண்டாம் பாதி இழந்து தவிக்கிறது. கடவுள் ஏன் மனித நீதித்துறைக்காக போராட வேண்டும், வில்லனின் சவாலை ஏன் ஏற்க வேண்டும் போன்ற கேள்விகள் எழுகின்றன. இரண்டாம் பாதி காட்சிகள் இலக்கில்லாமல் நகர்வது, முதல் பாதி தந்த தாக்கத்தை குறைக்கிறது. ஹீரோ-வில்லன் மோதல் மட்டுமே திரைக்கதையில் சுற்றிக்கொண்டிருப்பது ஒரு பெரிய மைனஸ். சாய் அபயங்கரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆக்ஷன் காட்சிகளுக்கு வலு சேர்க்கின்றன. ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஒட்டுமொத்தத்தில், சூர்யாவின் நடிப்பு, ஆர்.ஜே.பாலாஜியின் சில புத்திசாலித்தனமான காட்சிகள், அதிரடி ஆக்ஷன் ஆகியவற்றுக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.