லக்னோவில் நேற்று நடைபெற்ற பரபரப்பான 59-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 187 ரன்கள் குவித்தது. பின்னர் 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 12-வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இக்கட்டான சூழலில், பேட்டிங் செய்ய தயாராக இருந்த கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்காமல் இருந்தது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பண்ட்டிற்கு பதிலாக நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத் மற்றும் முகுல் சௌத்ரி ஆகியோர் களமிறங்கினர். இறுதியில், லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பிறகு பேசிய ரிஷப் பண்ட், 'நான் பேட்டிங் செய்ய தயாராகத்தான் இருந்தேன். ஆனால், இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை போதிய வாய்ப்புகள் கிடைக்காத இளம் வீரர்களுக்கு இந்த சூழ்நிலையில் ஒரு வாய்ப்பு கொடுத்து சோதித்துப் பார்க்கலாமே என்றுதான் நான் களமிறங்கவில்லை' என்று விளக்கினார். இந்த முடிவை அவர் தனது தனிப்பட்ட விருப்பமாக எடுத்ததாகத் தெரிவித்தார்.
இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் 3 மற்றும் 4-வது இடங்களில் ஆடிய பண்ட், அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்துப் பேசுகையில், 'தொடக்கத்திலிருந்தே மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகிய இரு வெளிநாட்டு வீரர்களை ஓப்பனிங் இறக்க வேண்டும், நிக்கோலஸ் பூரனை 3-வது இடத்தில் இறக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. சிஎஸ்கே-வுக்கு எதிராக அது சிறப்பாக அமைந்தது. ஆனால், வீரர்களின் காயம் மற்றும் ஃபார்ம் அவுட் காரணமாக இந்தத் திட்டத்தை இந்த சீசனில் எங்களால் முழுமையாகத் தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது' என்றும் தெரிவித்தார்.