ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா என்றாலே அதிரடி சிக்ஸர்களும், ரன் மழை தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். டி20 போட்டிகளில் ஒரு சதம் என்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், சில வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் 100 ரன்களை கடந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். குறிப்பாக, வெறும் 30 பந்துகளில் சதம் அடித்து உலகையே அதிரவைத்த ஒரு வீரரின் சாதனை, 13 ஆண்டுகளுக்குப் பிறகும் யாராலும் தகர்க்க முடியாத ஒன்றாக நீடிக்கிறது.
அந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில். 2013-ம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அவர், வெறும் 30 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதமாக முதலிடம் பிடித்தார். அந்தப் போட்டியில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த கெயிலின் இந்த 30 பந்து சதம், ஒரு மாபெரும் சாதனையாக இன்றும் நிலைத்து நிற்கிறது.
சமீப காலங்களில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2025-ம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராகவும், 2026-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் முறையே 35 மற்றும் 36 பந்துகளில் சதம் அடித்து, இந்த பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்களை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்திய வீரர்களின் சாதனைகளைப் பொறுத்தவரை, 2010-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யூசுப் பதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 37 பந்துகளில் அடித்த சதம் ஒரு மைல்கல்லாக உள்ளது. அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் கடந்த 2025 சீசனில் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இவர்களைத் தவிர டேவிட் மில்லர், டிராவிஸ் ஹெட், பிரியான்ஷ் ஆர்யா மற்றும் அபிஷேக் சர்மா போன்ற பல அதிரடி வீரர்களும் ஐபிஎல் வரலாற்றின் டாப் 10 அதிவேக சதங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.