கர்நாடக மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பருவகால காய்ச்சல்களும் அதிகரித்து வருகின்றன. இதில் பன்றி காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறையின் தகவல்களின்படி, கடந்த 8 மாதங்களில் மட்டும் கர்நாடகாவில் மொத்தம் 4,125 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல், அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தலைநகர் பெங்களூருவில் பதிவாகியுள்ளனர். பெங்களூருவில் மட்டும் 2,033 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பெங்களூரு நகரில் 982 பேர், மைசூருவில் 184 பேர், உடுப்பியில் 293 பேர், தட்சிண கன்னடாவில் 87 பேர், பல்லாரியில் 51 பேர், பெலகாவியில் 45 பேர், மண்டியாவில் 31 பேர், பெங்களூரு புறநகரில் 26 பேர், ஹாவேரி, பெங்களூரு தெற்கு ஆகிய பகுதிகளில் தலா 26 பேர், சாம்ராஜ்நகரில் 20 பேர், சிவமொக்காவில் 91 பேர், உத்தரகன்னடாவில் 41 பேர், தாவணகெரேயில் 23 பேர் என பல்வேறு மாவட்டங்களிலும் பன்றி காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சோப்பு அல்லது சானிடைசர்களை பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெந்நீர் அருந்துவது நல்லது. கண்கள், மூக்கு போன்றவற்றை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். சுய மருத்துவம் எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்பு இல்லாதவர்களும் கூட, தேவையற்ற கை குலுக்கல்களை தவிர்ப்பது நல்லது. அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். அனைவரும் கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
