வன்முறை சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையிலும், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட், 'மேலும் முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்கும் வகையில், ஏப்ரல் 16 அன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை, இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அரசியல் உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளது. மேலும், பென்டகன் மே 29 அன்று இரு நாடுகளின் இராணுவ பிரதிநிதிகளையும் ஒன்றிணைக்க ஏற்பாடு செய்துள்ளது. 'இந்தப் பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கும், இரு நாடுகளும் ஒன்றின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் முழுமையாக அங்கீகரிப்பதற்கும், பொது எல்லையில் உண்மையான பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என நம்புகிறோம்' என்று பிகாட் மேலும் கூறினார்.
இதற்கிடையில், ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை அன்று காலாவதியாக இருந்த நிலையில், பேச்சுவார்த்தைகளின் போது இஸ்ரேல் லெபனானில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. இருப்பினும், தொடர்ச்சியான வன்முறை நிகழ்ந்தபோதிலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் போர் நிறுத்தம் அமலில் இருப்பதாகக் கருதுகின்றன. இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஷியா குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி எல்லை தாண்டிய மோதலைத் தூண்டியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், வாஷிங்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஹிஸ்புல்லா பங்கேற்காததையும் இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சூழலில், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து குறிவைப்போம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.