வட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், பருவமழை காலம் தவறி பெய்து வரும் சூறாவளி காற்றும் கனமழையும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 111 பேர் இந்த துயர சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கனமழையால் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழையின் தாக்கத்தால், 72 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சேதமடைந்ததால், அப்பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், கட்டிடங்கள், மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் கடும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, பரைலி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன.
இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 74 முதல் 130 கி.மீ வரை பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், புழுதிப் புயலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும் மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.