இடுக்கி மாவட்டம் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சன்(65) என்பவர், போக்சோ வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாவூர், குறிஞ்சி பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர், தங்கச்சன் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கு இடுக்கி மாவட்ட விரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், தங்கச்சன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை தங்கச்சன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இடுக்கி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோ வழக்கு தீர்ப்பு எதிரொலி: தற்கொலை செய்துகொண்ட முதியவர்
