இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய தகவலில், தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு மே 26-ஆம் தேதி கேரளாவில் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் பருவமழை, சில நாட்கள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ துவங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மே 24-ஆம் தேதியே தென்மேற்குப் பருவமழை கேரளாவில் கால்பதித்தது. இந்த ஆண்டு சற்று தாமதமாக, மே 26-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தொடங்கிய பிறகு, அது கர்நாடகா, மகாராஷ்டிரா வழியாக வட இந்தியப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழையைப் பொழியும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும் தென்மேற்குப் பருவமழை, இந்தியாவின் மொத்த ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 70 சதவீதத்தைப் பெற்றுத் தருகிறது. விவசாயத்திற்கும், நாட்டின் நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் இந்தப் பருவமழை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
எனினும், இந்த ஆண்டு இந்தியாவில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 1971 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 87 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சுமார் 80 செ.மீ. ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.