தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் அறிவித்துள்ளார். இது பக்தர்களுக்கு பெரும் குட் நியூஸாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 கோவில்களில் 125 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், சிதிலமடைந்த 150 கோவில்களில் 85 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 22 கோவில்களில் தேவையான திருப்பணிகளைச் செய்ய 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமயபுரம், மருதமலை உள்ளிட்ட 13 முக்கிய கோவில்களில் மண்டபங்கள், சுற்று மண்டபம், வசந்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் இளைப்பாறும் மண்டபம் ஆகியவை 21.37 கோடி ரூபாய் மதிப்பில் கட்டித்தரப்படும். குச்சனூர் சனீஸ்வரர் கோவில் உட்பட 8 கோவில்களுக்கு 22.25 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
சென்னை கொளத்தூர் சோமநாதர் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ஆகிய மூன்று கோவில்களில் 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட உள்ளன. திருச்சி ரங்கநாதர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 105 கோவில்களில் திருக்குள பணிகளுக்காக 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் உள்ளிட்ட 3 கோவில்களில் 11 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டப்படும். திருவண்ணாமலை, பழநி, சிறுவாபுரி, இருக்கன்குடி உள்ளிட்ட 22 கோவில்களில் 50 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். பக்தர்கள் அதிகளவில் வரும் 20 முக்கிய திருக்கோவில்களில், பக்தர்களின் நலன் கருதி 3 கோடி ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில்களால் நடத்தப்படும் 4 பள்ளிகளில் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 5.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோவில்களை முன்மாதிரி கோவில்களாக மாற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். கிராம தெய்வங்களின் வழிபாட்டு மரபை போற்றும் வகையில் கிராம திருவிழா நடத்தப்படும். அனைத்து மண்டலங்களிலும் கூத்து, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கிராமிய திருவிழாக்கள் நடைபெறும்.
கோவில் வளாகத்திலேயே பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டம் 15 கோவில்களில் மேம்படுத்தப்படும். மூத்த குடிமக்கள் ஆயிரம் பேருக்கு அந்தந்த பகுதி முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். கோயில் நிலங்களில் அடர்வனம் மற்றும் நந்தவனம் அமைக்கப்படும். சித்தர்களின் பெருமையை போற்றும் வகையில் விழா நடத்தப்படும். காமராஜர் பிறந்த நாளில் கோயில்களில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்படும்.
மருதமலை, அழகர்கோவில்களுக்கு சொந்தமான பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும். மருதமலை கோவில் பள்ளியில் 90 லட்சம் ரூபாயில் கலையரங்கம் மற்றும் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அழகர் சுந்தர்ராசா மேல்நிலை பள்ளியில் 87 லட்சம் ரூபாயில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும்.
பழநி கோயில் கல்வி நிறுவனங்களுக்கு 3.10 கோடி ரூபாயில் 9 புதிய பஸ்கள் வாங்கப்படும். மீண்டும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படும். கோவை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றின் கரையோரம், 3 கோடி ரூபாய் மதிப்பில் யானைகள் நலவாழ்வு முகாம் மீண்டும் நடத்தப்படும். மீனாட்சி அம்மன் கோயில் கருணை இல்லத்தில் கூடுதல் அறை மற்றும் நவீன சமையல் கூடம் அமைக்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டார்.
