தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள், கோவில்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, அடுத்த 2 வாரங்களுக்குள் இந்த கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திடீர் உத்தரவால், டாஸ்மாக் பார்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களை நம்பி வாழும் குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மாற்று வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் தங்களது நிலை குறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இந்த பாதிப்புகளை கண்டித்தும், தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் பார்கள் இன்று மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில், சங்க நிர்வாகிகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான இடங்கள் மற்றும் வசதிகளை பார் உரிமையாளர்களே தங்களது சொந்த செலவில், விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைத்துள்ளதாகவும், இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வங்கி மற்றும் தனிநபர் கடன்கள் பெற்று, மாதந்தோறும் EMI தவணைகளை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பார் நடத்தி வரும் நிலையில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள 717 கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருப்பது தங்களை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளும் என்றும், இது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர். எனவே, டாஸ்மாக் கடைகளை மூட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மூடப்பட்ட கடைகளில் விற்பனையாகும் மது பாட்டில்களை அருகில் உள்ள கடைகளில் மொத்தமாக சேர்ப்பதால், அங்கு கூட்டம் அதிகரித்து, பொது வெளியில் மது அருந்தும் பழக்கம் அதிகரிக்கிறது என்றும், எனவே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் மூடப்பட்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீர்வு காணப்படாத பட்சத்தில், தொடர்ந்து பார்களை மூட திட்டமிட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.