ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.
முதலில் மே 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில எதிர்பாராத காரணங்களால் வெளியீடு தாமதமானது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், நடிகர் தனுஷ், ஜி.வி. பிரகாஷ் போன்ற திரைப்பிரபலங்கள் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
தற்போது அனைத்து பிரச்சனைகளும் சுமுகமாக தீர்க்கப்பட்டு, 'கருப்பு' திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக திரையிடப்பட்டது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். ரிலீஸ் அன்று காலை ஷோக்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து, பேனர்கள் அமைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, படக்குழுவினரான ஆர்.ஜே. பாலாஜி, நடிகை திரிஷா, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோர் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டருக்கு நேரில் சென்று படத்தைப் பார்வையிட்டனர். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்களுடனும் அவர்களை வரவேற்றனர். படம் முடிந்த பின்னரும், ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.