கூகுள் பே, போன்பே போன்ற யு.பி.ஐ செயலிகளில் பணம் அனுப்பும்போது, கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டும் பரிவர்த்தனை 'தோல்வி' என காட்டினால் உடனடியாகப் பதற்றமடையத் தேவையில்லை. இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் பெரும்பாலும் 60 நிமிடங்களுக்குள் சரிசெய்யப்பட்டு, பணம் தானாகவே உங்கள் கணக்கிற்குத் திரும்பிவிடும். எனவே, சிறிது நேரம் பொறுமையாக இருப்பது அவசியம்.
லட்சக்கணக்கான மக்கள் தினமும் எதிர்கொள்ளும் இந்தச் சிக்கலைத் தீர்க்க, வங்கியும் என்பிசிஐ (NPCI) அமைப்பும் தெளிவான பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்கியுள்ளன. உங்கள் பணத்தைப் பாதுகாப்பாகத் திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் இதோ.
பணம் பிடித்தம் செய்யப்பட்டவுடன் பதற்றமடைந்து மீண்டும் உடனடியாகப் பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். முதல் பரிவர்த்தனை தாமதமாக வெற்றிகரமாக முடிந்தால், இரட்டிப்பாகப் பணம் இழக்க நேரிடும். பெரும்பாலான சமயங்களில், 60 நிமிடங்களுக்குள் தொழில்நுட்பக் கோளாறுகள் சரியாகி, பணம் தானாகவே உங்கள் கணக்கிற்குத் திரும்ப வந்துவிடும்.
யு.பி.ஐ. பணம் செலுத்துவது தோல்வியடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தவறான யு.பி.ஐ. பின், வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாதது, தவறான யு.பி.ஐ. முகவரி ஆகியவை பொதுவான காரணங்களாகும். மேலும், ஒரு நாளில் செய்யக்கூடிய பரிவர்த்தனை எண்ணிக்கை அல்லது தொகை வரம்பை மீறினாலும் பணம் செலுத்த முடியாமல் போகலாம். சில வங்கிகள் தங்களுக்கென தனி தினசரி பரிவர்த்தனை வரம்புகளையும் வைத்திருக்கலாம்.
இதுதவிர, வங்கியின் சர்வர் பிரச்சினை, இணைய இணைப்பு பாதிப்பு, யு.பி.ஐ. பராமரிப்புப் பணிகள் அல்லது பணம் செலுத்தும் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில், சிறிது நேரம் காத்திருப்பது சிறந்த தீர்வாக அமையும்.
ஒருவேளை பணம் திரும்ப வரவில்லை எனில், உங்கள் கூகுள் பே, ஃபோன்பே அல்லது பேடிஎம் செயலியில் உள்ள 'UDIR' வசதியைப் பயன்படுத்தலாம். செயலியின் 'History' பகுதிக்குச் சென்று, தோல்வியடைந்த பரிவர்த்தனையைக் கிளிக் செய்து 'Check Status' அல்லது 'Raise Issue' என்பதைக் கொடுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும். செயலி மூலம் தீர்வு கிடைக்காதபட்சத்தில், அதில் உள்ள 'Help & Feedback' பகுதியில் புகார் அளிக்கலாம்.
செயலியில் புகார் அளித்தும் பிரச்சினை தீரவில்லை என்றால், உங்கள் வங்கியின் யு.பி.ஐ. தொடர்பான வாடிக்கையாளர் சேவைப் பிரிவை அணுகலாம். வங்கியுடன் தொடர்பு கொள்ளும்போது, யு.பி.ஐ. பரிவர்த்தனை எண் அல்லது UTR எண், உங்கள் வங்கிக் கணக்கு அல்லது யு.பி.ஐ. ஐடி, வணிக நிறுவனத்தின் பரிவர்த்தனை விவரம், பணம் செலுத்திய தேதி மற்றும் நேரம், செலுத்திய தொகை போன்ற விவரங்களைத் தயாராக வைத்திருங்கள்.
புகார் அளித்த பிறகு கிடைக்கும் ரெஃபெரென்ஸ் நம்பரை (Complaint Reference Number) மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆர்பிஐ (RBI) விதிகளின்படி, நபர் டூ நபர் (P2P) பரிவர்த்தனை தோல்வியடைந்தால் T+1 வேலை நாளுக்குள்ளும், வணிகர் (Merchant) பரிவர்த்தனை தோல்வியடைந்தால் T+5 வேலை நாளுக்குள்ளும் வங்கி பணத்தைத் திருப்பியளிக்க வேண்டும். இந்த காலக்கெடுவைத் தாண்டினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வங்கி உங்களுக்கு வழங்க வேண்டும். ஒருவேளை 30 நாட்களுக்கு மேலாகியும் வங்கி உங்கள் புகாரைத் தீர்க்கவில்லை என்றால், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர் அமைப்பை (RBI Integrated Ombudsman) அணுகலாம். புகார் அளிக்கும் போது பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட்கள், வங்கி அல்லது செயலியுடன் மேற்கொண்ட தொடர்புகளின் விவரங்கள், புகார் எண் மற்றும் வணிக நிறுவனத்தின் ஆர்டர் விவரங்கள் போன்றவற்றை இணைப்பது உதவும்.
