மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற சட்டைநாதர் சுவாமி கோவிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆலயத்தில், வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பான கோபூஜை வழிபாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மாசிலாமணி நிலையத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் பங்கேற்று, பசுக்களுக்கு வழிபாடு நடத்தினார்.
கோபூஜையைத் தொடர்ந்து, கொடிமரத்து விநாயகர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. கோசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட பசு மாடு மற்றும் கன்றுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பசுக்களுக்கு வாழைப்பழங்கள் மற்றும் அகத்திக்கீரைகளை வழங்கி வலம் வந்து வணங்கினர்.
மேலும், பிரம்மபுரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் உள்ள காட்சி கொடுத்த நாயகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் தேவாரப் பாடல்களைப் பாடி, இறைவனை தரிசித்து மனமுருக வழிபாடு செய்தனர்.