திமுகவுடனான 10 ஆண்டு கால கூட்டணி, வெறும் 10 நாட்களில் கலைந்துவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமா என்ற கேள்விகள் எழுப்பப்படுவதாகக் குறிப்பிட்டார். இது அண்ணா, திமுகவை ஆரம்பித்தபோது எழுந்த அதே கேள்விகள் என்றும், 1967 மற்றும் 1977-ல் ஏற்பட்ட அரசியல் புரட்சிகளைத் தொடர்ந்து, 2026-ல் மீண்டும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தவெகவில் வெற்றி பெற்றவர்கள் யாரும் பண்ணையார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், 8 பட்டியலின சகோதரர்களை அமைச்சர்களாக்குவதன் மூலம் பெரியார் கண்ட கனவை நிறைவேற்றியுள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா கூறினார். ஏழைகளும், சாமானியர்களும் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவு நனவாகி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
காய்கறிகள் வாங்குவது போல வாக்குகளைப் பெறும் கலாச்சாரத்தை ஒழித்தவர் நடிகர் விஜய் என்று குறிப்பிட்ட அமைச்சர், தவெகவில் உள்ளவர்கள் பண்ணையார் பிள்ளைகளோ, மன்னராட்சியின் மகன்களோ அல்ல என்றும், சாதி, மத பலம் ஏதுமற்ற சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விளக்கினார். அம்பேத்கர் கண்ட கனவு, இந்த அவையில் முதல் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஏழை, எளிய இளைஞர்களும் பெண்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக அமர்ந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சென்னை நேரு ஸ்டேடியத்தில் உயர்தரப் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், தேசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் விமானக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் அவர் அறிவித்தார். மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கடல்வழி படகுப் போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
