டெல்லியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக காண்போம்.
சங்கம் விஹாரில் வசித்து வந்த முன்னா லால் (55) என்பவர், கடந்த 10 ஆம் தேதி அதிகாலை சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிகாலை 5 மணியளவில் முன்னா லால் சாலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முன்னா லாலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் பல காயங்கள் காணப்பட்டதால், அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, முன்னா லாலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், முன்னா லாலின் மனைவி நசியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இரவில் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருட முயன்றதாகவும், அதனை தடுக்க முயன்ற தனது கணவரை அடித்து கொன்றுவிட்டு திருடர்கள் ஓடிவிட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார். ஆனால், அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. சம்பவம் நடந்தபோது தான் தூங்கிக்கொண்டிருந்ததாக நசியா தெரிவித்திருந்தார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில், முன்னா லாலின் மனைவி நசியாவும், அவரது கள்ளக்காதலன் சமன் மற்றும் அவனது கூட்டாளியும் சேர்ந்து இக்கொலையை செய்தது அம்பலமானது. இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் மித்தல் கூறியதாவது: 'நாங்கள் நசியாவிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் முழு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். தனது கணவரை அவரது கள்ளக்காதலன் சமன் மற்றும் அவனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருட முயன்றதாகவும், அவர்களை தனது கணவர் எதிர்த்து போராடியபோது திருடர்கள் அவரைக் கொன்றுவிட்டனர் என்றும், அந்த நேரத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், அவர்களது வீட்டை சோதனை செய்ததில், தரையை சுத்தம் செய்ததும், ரத்தத்தின் தடயங்களை அகற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்தது' என தெரிவித்தார்.
மேலும் விசாரணையில், நசியாவிற்கும், அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் வேலை செய்யும் சமன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த உறவு நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால், சமனிடம் தனது கணவரை கொலை செய்யும்படி நசியா கூறி வந்துள்ளார். இக்கொலைக்காக ரூ.5 லட்சம் கொடுப்பதாகவும் நசியா உறுதியளித்துள்ளார். அதோடு, முன்பணமாக ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார்.
சமன், நசியாவுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று, கணவர் முன்னாவை உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி நசியா அழைத்துள்ளார். மேலும், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மாத்திரை என்று கூறி, நசியா அந்த மாத்திரைகளை தண்ணீரில் கலந்து கொலைக்கு முன் முன்னாவிடம் கொடுத்துள்ளார். தண்ணீரை குடித்தவுடன் முன்னா மயங்கிய பிறகு, சமன் தனது கூட்டாளியுடன் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கயிற்றால் நெரித்தும், மின்சாரம் பாய்ச்சியும் கொலை செய்துள்ளார். முன்னாவின் மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இக்கொலையில் சமனுக்கு அவரது கூட்டாளி கிஷன் உதவி உள்ளார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்' என்று அவர் கூறினார்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
