இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1976-ல் 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்போது தனது திரை இசைப்பயணத்தில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த பொன்விழாவையொட்டி, தனது இசைப் பயணம் குறித்த நெகிழ்ச்சிகரமான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
'காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் நான் அப்படியே இருக்கிறேன். என்னை பலரும் 'இசை கடவுள்' என்று அழைக்கிறார்கள். ஆனால், ஒரு கடவுளுக்கு தான் கடவுள் என்ற எண்ணம் இருக்குமா? அதுபோலத்தான் இதுவும். மக்கள் என்னை எப்படிப் பார்க்க விரும்புகிறார்களோ அப்படியே பார்க்கட்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை, அது என் பெருமையும் இல்லை' என்று இளையராஜா கூறியுள்ளார்.
மேலும் அவர், 'ரசிகர்கள் காட்டும் அன்பு மகத்தானது. நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடும்போது கூட, சில சமயங்களில் மனம் அலைபாயலாம். ஆனால், 'ஜனனி… ஜனனி…' போன்ற எனது பாடல்கள் அந்த தருணங்களில் கூட மனதை ஒருமுகப்படுத்தி, அமைதியைத் தருகின்றன. நான் இந்த உலகை விட்டுப் பிரிந்தாலும், எனது பாடல்கள் தரும் கொண்டாட்டம் என்றும் நிலைத்திருக்கும்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தனது இசைப் பணிகளைத் தொடரும் இளையராஜா, விரைவில் தனது இரண்டாவது சிம்பொனியையும் வெளியிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.