தமிழகத்தில் பெண்களின் நலனை முன்னிட்டு திமுக ஆட்சியில் மாதந்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த மாதம் எப்போது பணம் வரும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இன்று (மே 15) பணம் வந்துவிடும் என்ற தகவலும் பரவியது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நேற்று வரவு வைக்கப்பட்ட நிலையில், பெண்களும் இந்த தொகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், இதுகுறித்து முதல்வர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தை மறுசீரமைக்க சில கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, பணம் விரைவில் வந்து சேரும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவதாக விஜய் உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தற்போது மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்பட உள்ளது. இது முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பிறகு வழங்கப்படும் முதல் உரிமைத்தொகையாகும்.
தற்போது தமிழகத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் இந்த உரிமைத்தொகையால் பயனடைந்து வருகின்றனர். விரைவில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.