டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், எரிபொருள், உணவு தானியங்கள் மற்றும் உரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு, தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என விரிவடைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் நேற்று பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி, பிரேசில் வெளியுறவு அமைச்சர் மரியோ வியா்ரா, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகினோ, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் ரொனால்டு லாமோலா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீக்கு பதிலாக சீன தூதர் சூ பெய்ஹாங் மாநாட்டில் பங்கேற்றார்.
மாநாட்டிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஜெய்சங்கர், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்களால் வளரும் நாடுகள் சந்திக்கும் சவால்களை சுட்டிக்காட்டினார். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், உலகளவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச சட்ட விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு-நாடுகள் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
போர்களால் பல்வேறு நாடுகளில் எரிபொருள், உணவு தானியங்கள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும், இதனால் நிதிச் சுமை அதிகரித்துள்ளதையும், சுகாதாரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதையும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பருவநிலை மாற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் தீவிர கவனம் செலுத்தி, அனைத்து நாடுகளுக்கும் தொழில்நுட்பங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.