முதலமைச்சரின் தாயார் குறித்து பாஜக மாநில துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சுந்தர், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து அருவருப்பானது என்றும், எந்தவொரு அரசியல் களத்திலும் தனிப்பட்ட விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்த அதிரடி கருத்து, பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சியின் மூத்த நிர்வாகியே மாநிலத் தலைவரின் பேச்சைக் கண்டிப்பது இதுவே முதல் முறை என்பதால், இது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெண்களுக்கு மிகுந்த முன்னுரிமையும் மரியாதையும் அளித்து வருவதாகக் குறிப்பிட்ட குஷ்பு, இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக வேதனை தெரிவித்தார்.
'அரசியல் விளையாட்டுகளில் பெண்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது' என்றும், எந்தவொரு பெண்ணைப் பற்றியும் அவதூறாகப் பேசுவதற்கு முன் ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டும் என்றும் குஷ்பு வலியுறுத்தினார்.
முன்னதாக, நயினார் நாகேந்திரனின் இந்த எல்லை மீறிய பேச்சுக்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குஷ்புவின் இந்த பகிரங்கக் கண்டனம் பாஜகவை மேலும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அரசியல் நாகரிகத்தைக் காக்கவும், பெண்களின் கண்ணியத்தைப் பேணவும் தலைவர்கள் தங்கள் வார்த்தைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
