தமிழகத்தின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் நலன் கருதி, பருத்திக்கான இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர் பிரதமருக்கு ஒரு விரிவான கடிதத்தை எழுதியுள்ளார்.
இந்தியாவிலேயே ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. இத்துறையின் மூலம் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் அரை-நகர்ப்புறப் பெண்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. ஆனால், சமீப காலமாக பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நூல் விலையும் அதிகரித்துள்ளது. இது இத்துறையை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளதும், வர்த்தக நடவடிக்கைகளின் அதிகரிப்பும் இதற்குக் காரணம் என முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில், பருத்தி விலை ஒரு கண்டிக்கு ரூ.54,700-லிருந்து ரூ.67,700 ஆக, அதாவது 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், நூல் விலையும் கிலோவுக்கு ரூ.301-லிருந்து ரூ.330 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இறக்குமதியை நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், தற்போது பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்படுவது பெரும் சுமையாக உள்ளது.
இந்த இறக்குமதி வரியை ரத்து செய்வதன் மூலம், அதிகரித்து வரும் ஏற்றுமதி ஆர்டர்களை நிறைவேற்றவும், உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மையுடன் திகழவும் முடியும். வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளித்துறைதான் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும், இத்துறையின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதும் அரசின் கடமை என முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எனவே, 11 சதவீத இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.