இந்தியாவின் 80வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இது, பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்ந்து 13வது முறையாகும்.
டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் 'வீடியோ' பகுப்பாய்வு வசதி கொண்ட ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விழா நடைபெற்றது. முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் பங்கேற்றனர்.
முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடிக்கு, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இது செங்கோட்டையில் சுதந்திர விழா நிகழ்ச்சிகள் துவங்கும் போது 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படுவது முதல் முறையாகும். இது குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, 'இன்று, ஒவ்வொரு இதயமும் 'வந்தே மாதரம்' எனும் தாளத்திற்கு ஏற்பத் துடிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மூவர்ணக் கொடி உள்ளது' என உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டார்.
அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தனது அஞ்சலியை செலுத்திய பிரதமர், 'இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலித்த தருணம். இன்று இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்' எனத் தெரிவித்தார்.
மேலும், '2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே நமது பெரும் கனவு. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, வளர்ந்த நாடாக மாறுவதற்கான உறுதியை மேற்கொள்ளும்போது, அது நமது துணிச்சலின் அடையாளமாக வெளிப்படுகிறது' என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த பிரதமர், 'பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் – நாங்களும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம்' எனத் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமத் தொழில் உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 சதவீதமும் அதிகரித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'ஒரு நாடு தனது கனவுகள், உறுதிப்பாடு மற்றும் உள்ளார்ந்த வலிமை ஆகியவற்றால் உந்தப்பட்டு முன்னேறும்போதுதான் அது மகத்தானதாகித் தனது இலக்குகளை அடைகிறது. சிறிய கனவுகள் இனிப் போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில், பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்துவதோடு, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளையும் அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதியான மனநிலை இருக்கும்போது, இடர்பாடுகள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் கூட முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்கும் ஆற்றல் இயல்பாகவே உருவாகிறது' என பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தினார்.
'2047-ஆம் ஆண்டில் நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றியிருக்க வேண்டும் என்பதே நமது தொலைநோக்குப் பார்வையாகும். 140 கோடி குடிமக்களின் கூட்டு முயற்சியாலும், கடின உழைப்பு மனப்பான்மையாலும் நாம் இந்த இலக்கை அடைய வேண்டும்' என்று அவர் கூறினார். மேலும், 'நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாறி, நமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இன்று, ஒவ்வொரு இந்தியரும் 'மேக் இன் இந்தியா', 'சுதேசி' மற்றும் 'வோக்கல் ஃபார் லோக்கல்' (Vocal for Local) போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து வருகின்றனர்' என்றும் அவர் தெரிவித்தார்.
