மும்பையில் இருந்து மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, நீட் தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் தேசிய அளவில் நடைபெற்ற மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இதில், நீட் தேர்வுப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் சில கூட்டுச் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கடந்த 2024-ல் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த போது மத்திய அரசு என்ன செய்தது? தேர்வை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. நீட் தேர்வு முறையே தேவையில்லாத ஒன்று என்றும், இதை தான் கடந்த 2016 முதல் கூறி வருவதாகவும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்த தேர்வு பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகவும், இது குறித்து தென் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு முக்கியக் காரணம், ஐந்து தென் மாநிலங்களில் (மகாராஷ்டிரா உட்பட) மொத்தம் 350 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால், வடக்குப் பகுதியில் உள்ள பெரிய மாநிலங்களில் வெறும் 180 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதனால், வட மாநில மாணவர்கள் தென் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயனடைகின்றனர்.
எனவே, இந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ராஜ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். மேலும், நீட் தேர்வில் தொடர்ச்சியாக முறைகேடுகள் அரங்கேறி வரும் சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் தென் மாநிலங்களுடன் இணைந்து நீட் தேர்வு ரத்து செய்ய குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.