சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் தங்கள் அரசியல் கொள்கை என்றால், அதை தைரியமாக தேர்தல் பிரச்சாரங்களில் திமுகவும், தமாகாவும் அறிவித்திருக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய நிலையில், தமாகா சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, "சனாதன இந்து தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசிய சில நாட்களிலேயே, தமாகா சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவும் அதே கருத்தை ஆதரிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இது, வாழ்க்கைக்கு வழிகாட்டும் நித்திய தர்மத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பைக் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
திமுகவும், தமாகாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை தங்களின் குறுகிய கால வரலாற்றிலேயே நிரூபித்துவிட்டதாக அண்ணாமலை சாடியுள்ளார். சனாதன இந்து தர்மத்தின் மீதான தொடர் தாக்குதல்கள் திமுகவை எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதை அவர்கள் மறந்துவிட்டதாகவும், தமாகாவும் விரைவில் அதை உணரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உண்மையான துணிச்சல் இருந்தால், சனாதனத்தை குறிவைப்பதே தங்கள் அரசியல் என்பதை தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மதச்சார்பின்மை என்ற பெயரில் மறைந்துகொண்டு, வாக்கு கேட்ட மக்களிடமே ஆணவத்துடன் உண்மையான எண்ணங்களை வெளிப்படுத்துவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சனாதன இந்து தர்மம் ஒரு விளையாட்டுப் பொருள் அல்ல என்றும், இந்த கருத்துக்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் உறுதியாக நம்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.