சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற 'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் விழாவில், முதலமைச்சர் விஜய்யின் கவனத்தை ஈர்த்த ஒரு குட்டி போலீஸ் அனைவரையும் கவர்ந்தது. பதக்கம் பெற்ற காவல் அதிகாரியின் மகனான இந்த சிறுவன், முதலமைச்சருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடமிருந்து ஒரு சல்யூட்டையும் பெற்றான்.
'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற பெயரில் மாநில அளவிலான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் விழா, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுப்பதில் சிறப்பான பணியாற்றிய 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான 'முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்' வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த முக்கிய விருதினை பெற்றவர்களில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்களும் ஒருவர். விருது வழங்கும் விழாவில் பங்கேற்க எஸ்.பி. சந்தீஷ் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருடன் வந்திருந்த அவரது 4 வயது மகன் ஷன்முக், சிறிய காவலர் சீருடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான். நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர் விஜய்யைப் பார்த்த அச்சிறுவன், தானும் மேடைக்குச் செல்ல வேண்டும் என்று தந்தையிடம் பிடிவாதமாக கேட்டுள்ளான்.
மகனுடன் மேடை ஏறிய எஸ்.பி. சந்தீஷிடம் முதலமைச்சர் விஜய் விசாரித்தபோது, சிறுவனை அன்புடன் கையில் தூக்கிக் கொண்டார். சில வினாடிகள் சிறுவனிடம் பேசிய முதலமைச்சர், பின்னர் அவனை கீழே இறக்கிவிட்டார். மேடையிலிருந்து கீழே இறக்கப்பட்ட அந்த 4 வயது சிறுவன் ஷன்முக், அங்கு நின்றிருந்த மூத்த காவல் அதிகாரிகளைப் போலவே கம்பீரமாக முதலமைச்சர் விஜய்யின் நேர் எதிரில் நின்று சல்யூட் அடித்தான்.
சிறுவனின் இந்த சுட்டித்தனமான மற்றும் கம்பீரமான செயலைக் கண்டு நெகிழ்ந்த முதலமைச்சர் விஜய், முகமலர்ச்சியோடு பதிலுக்குத் தானும் சல்யூட் அடித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கு கூடியிருந்த அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கைதட்டலைப் பெற்றது.
அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களின் கரவொலிக்கு மத்தியில், அந்தச் சிறுவன் மிகுந்த உற்சாகத்துடன் தன் தந்தையுடன் மேடையை விட்டு இறங்கிச் சென்றான். சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில் நடந்த இந்த நெகிழ்ச்சியானத் தருணம், அங்கு இருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சிறுவன் ஷன்முக் அணிந்திருந்த காவலர் சீருடை, அவனது கம்பீரமான சல்யூட், மற்றும் முதலமைச்சர் விஜய்யின் அன்பான பதில் என அனைத்தும் சேர்ந்து இந்த நிகழ்வை ஒரு மறக்க முடியாத தருணமாக்கியுள்ளன. போதைப் பொருள் ஒழிப்பு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நெகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படுவது, பொதுமக்களிடையே காவல்துறையினர் மீதான நம்பிக்கையையும் மரியாதையையும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
