இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளும் பணிகள் மே 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இது எஸ்ஐஆர் பணிகளின் மூன்றாம் கட்டமாகும்.
முன்னதாக, பீகாரில் கடந்த ஆண்டு முதல் கட்ட எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட பணிகள் நடந்தன. தற்போது, மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. இருப்பினும், இமாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்த முறை எஸ்ஐஆர் பணிகளின் கீழ் வரவில்லை. அப்பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழல் போன்ற சில காரணங்களால், அங்கு பின்னர் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணிகளுக்காக சுமார் 3.94 லட்சம் பூத் லெவல் ஆஃபீசர்ஸ் (பிஎல்ஓக்கள்) பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுடன் எஸ்ஐஆர் பணிகளையும் இணைத்து, களப் பணியாளர்களை திறம்பட பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிஎல்ஓக்கள் 36.73 கோடி வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று ஆவணங்களை சரிபார்ப்பார்கள்.
இந்த முறை டெல்லியும் மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணிகளில் இடம்பெறுகிறது. டெல்லியில் இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர்களை இந்த சிறப்புத் திருத்தப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, தகுதியான வாக்காளர் என்பதை உறுதி செய்ய உரிய படிவத்தைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். முதல் கட்டத்தில் பீகாரில் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர், இது மொத்த வாக்காளர்களில் 5-6% ஆகும். இரண்டாம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 2.04 கோடி வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 83.86 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டனர்.