நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான 'கருப்பு' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரிலீசுக்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும், படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடீர் ரத்து குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'ரசிகர்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். வெகுதூரத்தில் இருந்து படம் பார்க்க வந்த நீங்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்ததற்கு மன்னிக்கவும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, இன்று மாலை 6 மணிக்கு படம் வெளியாகும் என்று நம்புகிறேன். இந்தப் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும்' என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
'கருப்பு வருகிறான்… வழிமறிக்காதீர்கள்' என்ற வாசகத்தை குறிப்பிட்ட இயக்குநர், பல தடைகளைத் தாண்டி இன்று மாலை படம் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடவுள் எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்து படத்தை வெளியிட உதவுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.