தமிழ்நாட்டில் வீட்டு சோலார் சிஸ்டம் அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் பெறும் புதிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் 'பிஎம் சூர்யா கர் இலவச மின்சார திட்டம்' உடன் இணைந்து, தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 3 கிலோவாட் திறன் கொண்ட கூரை சோலார் அமைக்கும் வீடுகளுக்கு மொத்தமாக ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள், மின் கட்டணச் சேமிப்பு கணக்கீடு மற்றும் விண்ணப்பிக்கும் முறையை விரிவாகக் காண்போம்.
இத்திட்டத்தின் கீழ், வீட்டின் கூரையில் சோலார் பேனல் அமைப்போருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மானியம் வழங்குகின்றன. 1 முதல் 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புகளுக்கு, ஒரு கிலோவாட்டிற்கு தலா ரூ.30,000 வீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதனுடன் தமிழக அரசின் தகுதி அடிப்படையிலான கூடுதல் மானியமும் சேரும். 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட சோலார் சிஸ்டம் அமைப்போருக்கு மத்திய அரசு நிலையான மானியத் தொகையாக ரூ.78,000 வழங்குகிறது. இந்த நிதியுதவியுடன், தமிழக அரசு தனது பங்காக மேலும் ரூ.22,000 கூடுதல் மானியமாக இணைத்து வழங்குகிறது. இதன் மூலம் 3 கிலோவாட் சோலார் அமைக்கும் ஒரு குடும்பத்திற்கு மொத்த மானியத் தொகை ரூ.1 லட்சமாக உயர்கிறது.
இந்திய அளவில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கூரை சோலார் அமைப்பதில் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இம்மாநிலங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு சோலார் இணைப்புகளைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளன. ஆனால், அதிக சூரிய ஒளி திறன் மற்றும் மின் நுகர்வு கொண்ட தமிழ்நாட்டில் இதுவரை கூரை சோலார் இணைப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கூடத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ்நாடு ரூ.576.66 கோடி மட்டுமே மானியமாகப் பெற்று, 303.63 மெகாவாட் திறனை மட்டுமே எட்டியுள்ளது. மாநில அரசின் தனிக் கூடுதல் மானியம் இல்லாததே தமிழ்நாடு பிற மாநிலங்களை விடப் பின்தங்கியற்குக் முதன்மைச் காரணமாகக் கூறப்பட்டது.
இந்தக் குறையைப் போக்கி, தமிழ்நாட்டு மக்களின் மின் கட்டணச் சுமையைக் குறைக்கவும், சோலார் பயன்பாட்டைத் தீவிரப்படுத்தவும் இக்கூடுதல் மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. கூரை சோலார் அமைப்பதால் மின் கட்டணம் பூஜ்ஜியமாகும் சாத்தியம் உள்ளது. இதற்காக 'நெட் மீட்டரிங்' என்ற தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. 1 கிலோவாட் திறன் கொண்ட சோலார் சிஸ்டம் நாளொன்றுக்கு சராசரியாக 4 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. அதன்படி, 3 கிலோவாட் சிஸ்டம் அமைத்தால் நாள் ஒன்றுக்கு 12 யூனிட் வரை மின்சாரம் கிடைக்கும்.
பகல் நேரத்தில் உங்கள் வீட்டின் சோலார் பேனல்கள் தயாரிக்கும் மின்சாரத்தில், உங்கள் வீட்டின் பயன்பாட்டிற்குப் போக மீதமுள்ள உபரி மின்சாரம் மின்வாரியத்தின் மின் கட்டமைப்பிற்குத் தானாகச் சென்றுவிடும். மாதத்தின் இறுதியில், நீங்கள் பயன்படுத்திய மொத்த மின்சார யூனிட்டுகளில் இருந்து, மின்வாரியத்திற்கு நீங்கள் கொடுத்த சோலார் மின்சார யூனிட்டுகள் கழிக்கப்பட்டு கணக்கிடப்படும். நீங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை விடக் கூடுதலாகப் பயன்படுத்தினால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டி வரும். பயன்பாடு குறைவாக இருக்கும் பட்சத்தில் உங்களது மின் கட்டணம் பூஜ்ஜியமாக மாறிவிடும்.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, 'பிஎம் சூர்யா கர்: இலவச மின்சார திட்டம்' நாடு தழுவிய அளவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில் 50.06 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் கூரை சோலார் சிஸ்டம் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பிருந்த 10 ஆண்டுகளில் வெறும் 7.94 லட்சம் வீடுகளில் மட்டுமே சோலார் பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.28,024 கோடி மானியமாக அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது பூஜ்ஜியம் மின் கட்டணப் பலனைப் பெற்று வருகின்றன. மேலும், உபரி மின்சாரத்தை அரசுக்கு விற்றதன் மூலம் 12 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் நிதியாண்டில் மொத்தம் ரூ.421 கோடி வரை சம்பாதித்துள்ளன. இது ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்குச் சராசரியாக ரூ.3,500 வரை கூடுதல் வருமானத்தைத் தருகிறது.
இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் ஆன்லைன் மூலமாக மிக எளிதாக விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmsuryaghar.gov.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் மாநிலமாக தமிழ்நாடு என்பதையும், மின் விநியோக நிறுவனமாக TANGEDCO என்பதையும் தேர்வு செய்து, உங்களது மின் நுகர்வோர் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு பூர்த்தியான பின், கூரை சோலார் அமைப்பிற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அரசு மூலம் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் வாயிலாக உங்கள் வீட்டின் கூரையில் சோலார் பேனல்கள் நிறுவப்படும். மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து நெட் மீட்டர் பொருத்திய பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் சந்தேகங்களுக்கு 15555 என்ற உதவி எண்ணை அழைத்து விவரங்களைப் பெறலாம்.
