ஹரியானாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்த தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் அவரது மூன்று மகள்களும் வீடியோ கால் மூலம் கலந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மும்பையைச் சேர்ந்த 74 வயதான தொழிலதிபர் சிவச்சரன் குப்தா, தனது வாழ்நாள் முழுவதும் தனது மூன்று மகள்களை நன்கு படிக்க வைத்து, அவர்களுக்குச் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். ஆனால், முதுமைக் காலத்தில் அவரைப் பராமரிக்க யாரும் முன்வராததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததை அடுத்து, முதியோர் இல்ல நிர்வாகம் அவரது மூன்று மகள்களுக்கும் தகவல் தெரிவித்தது.
தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், அவரது இறுதிச்சடங்கில் மூன்று மகள்களும் நேரடியாகப் பங்கேற்கவில்லை. மாறாக, நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பை ஆகிய வெவ்வேறு இடங்களில் இருந்து வீடியோ கால் மூலம் தங்கள் தந்தையின் இறுதிச் சடங்குகளைப் பார்த்தனர். இது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த்குமார் கூறுகையில், 'சிவச்சரன் குப்தா தனது மகள்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தார். ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, மகள்களின் அழைப்புகள் குறைந்துவிட்டன. அவர் இறப்பதற்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் அவரை வந்து பார்க்கவில்லை. குப்தா இறந்த பிறகும் நாங்கள் மூன்று மகள்களுக்கும் தகவல் கொடுத்தோம். ஆனால், தங்களுக்கு நேரமில்லை என்று கூறி தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகுதான் அவர்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கைப் பார்த்தனர்' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'நேபாளத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் குப்தாவின் மகள் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பினார். ஆரம்பத்தில், குப்தாவின் அஸ்தியை தங்களிடம் தருமாறு குடும்பத்தினர் கேட்டிருந்தனர். ஆனால், சோனிபட்டுக்கு வர தங்களுக்கு நேரமில்லை என்பதால், அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்' என்றும் கூறினார்.
இந்தச் சம்பவம், இன்றைய காலகட்டத்தில் உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும், பெற்றோரைக் கவனிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்களின் செயல், பலரையும் நெகிழச் செய்துள்ளது.
