கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மங்கலம் அணையின் பாதுகாப்பு கருதி, 6 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணையின் நீர்வரத்துக்கு ஏற்ப, தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிசூர், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை பெய்த மழையால், 8 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 8 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து கேரள முதல்வர் சதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் தொடங்கியுள்ளன. கட்சி தொண்டர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்தப் பணிகளில் பங்கேற்க வேண்டும். அரசு முழு ஆதரவை வழங்கும்' என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, மழையால் 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட 5792 பேர், 209 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தவர்களுக்கும் அரசு நிச்சயம் உதவி செய்யும் என முதல்வர் சதீசன் உறுதியளித்துள்ளார். மலைப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மழையின் அளவு சற்று குறைந்திருந்தாலும், எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் சதீசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
