கிரிக்கெட் மைதானங்களில் வீரர்களின் கவனத்தை சிதறடிக்க எதிரணி வீரர்கள் வார்த்தைப்போரில் ஈடுபடுவது சகஜம்தான். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை, கீப்பர் லிட்டன் தாஸ் மிகவும் மோசமாக கிண்டல் செய்துள்ளார். இந்த கிண்டலால் மனதளவில் பாதிக்கப்பட்ட ரிஸ்வான், அடுத்த சில நிமிடங்களிலேயே எந்த ஷாட்டும் ஆடாமல் விசித்திரமான முறையில் போல்டாகி வெளியேறிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நெருக்கடியான சூழலில் களமிறங்கிய முகமது ரிஸ்வான், முதல் இன்னிங்சில் 59 ரன்கள் குவித்து அசத்தியிருந்ததால், இந்த இன்னிங்சிலும் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்டத்தின் 38வது ஓவரில், வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் வீசினார். அப்போது விக்கெட்டுக்கு பின்னால் நின்றிருந்த லிட்டன் தாஸ், ரிஸ்வானை சீண்டும் வகையில் பேசினார். 'இப்போது பாகிஸ்தான் வீரர்கள் போட்டியை வெல்வதற்காக விளையாட மாட்டார்கள். எப்படியாவது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளத்தான் பார்ப்பார்கள். ஏற்கனவே பாகிஸ்தானில் ரிஸ்வானுக்கு மிக மோசமான கெட்ட பெயர் உள்ளது. ஒருவேளை இப்போது அவர் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு அவுட் ஆகிவிட்டால், அவரால் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்ப முடியாது' என சத்தமாக கிண்டலடித்தார். இந்த வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகப் பதிவாகின.
லிட்டன் தாஸின் கிண்டலால் ரிஸ்வானின் கவனம் வெகுவாகச் சிதறியது. இதன் விளைவாக, நஹித் ராணா வீசிய 147 கிமீ வேகத்திலான பந்தை எதிர்கொண்டபோது, அந்தப் பந்து ஸ்டம்புக்கு வெளியே செல்லும் எனத் தவறாகக் கணித்து பேட்டை மேலே தூக்கினார். ஆனால், பந்து உள்ளே வந்து ஸ்டம்பைத் தகர்த்தது. தான் அவுட் ஆனதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்த ரிஸ்வான், 46 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். லிட்டன் தாஸ் கிண்டலடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே ரிஸ்வான் விக்கெட்டை பறிகொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
