நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் 'கருப்பு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது மே 14 அன்று உலகளவில் வெளியாக உள்ளது. இதனையொட்டி, படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று இரவு கேரளாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த முதலமைச்சர் கிடைத்துவிட்டதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், 'தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. சமீபத்தில் எங்கள் மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலர் முதலமைச்சர் ஆக முயற்சித்தனர். ஆனால் உங்கள் மாநிலத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த பலர் முதலமைச்சர் ஆக முயற்சி செய்தனர்.
எங்களுக்கு நல்ல முதலமைச்சர் கிடைத்துவிட்டார். உங்களுக்கும் விரைவில் ஒரு நல்ல முதலமைச்சர் கிடைக்க எனது வாழ்த்துகள். மேலும், இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள மற்றொரு ஒற்றுமை, நடிகர் சூர்யா மீது நீங்கள் காட்டும் அன்புதான்' என்று அவர் தெரிவித்தார்.