தவெக தலைவரான விஜய், கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவின்போதே, 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்புப் படை உருவாக்கம் போன்ற முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டத்திற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட முதல்வர் விஜய் இன்று உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: 'முதல்வர் விஜய்க்கு என் மனமார்ந்த நன்றிகள். இது மிகப்பெரிய ஆறுதலும், சாதனையும் ஆகும். 717 மதுபானக் கடைகளை மூட நீங்கள் எடுத்த முடிவு மிகப்பெரிய விஷயம் என்று நான் சொல்வேன். குறிப்பாக, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடச் சொல்லி உத்தரவிட்டதற்கு மிகவும் நன்றி. முதல்வருக்கு என் பாராட்டுகள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயம் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது என்றால், பல பெண் குழந்தைகள் டாஸ்மாக் கடைகளைக் கடந்து செல்லும்போது படும் துன்பங்களை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இதை யாராவது மாற்ற மாட்டார்களா என்று காத்திருந்தோம். இப்போது அது நடைமுறைக்கு வரும்போது, உங்களுக்கு விசில் அடிக்கத் தோன்றுகிறது. இதுதான் பொதுமக்களாகிய நாங்கள் விரும்பிய மாற்றம். டாஸ்மாக் மூலம் அரசாங்கத்திற்கு வருவாய் வரும். அப்படியிருந்தும், 717 மதுபானக் கடைகளை மூட முடிவு எடுத்திருக்கிறீர்கள். பொதுமக்கள், பெண்கள், முதியோர்கள் எனப் பலருக்கும் இது ஒரு வரமாக அமையும். முதல்வருக்கு நன்றி. இப்படியே நீங்கள் மக்களுக்கு இன்னும் பல நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும்' என்று விஷால் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, சாலைப் பிரச்னை, பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும்படி நடிகர் விஷால், முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்தார்.