உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசன்பூர் தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்ரி (19), மற்றும் சண்டோஷ் (18) ஆகிய மூன்று சகோதரிகளும் சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மூவரும், ஜூலை 17 அன்று சாமுண்டா மாதா கோவிலில், தங்களுக்கு கேமரா மேனாக பணியாற்றி வந்த விகாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண விழாவின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், விமர்சனங்களுக்கும் உள்ளானது.
வெளியான காணொளிகளில், திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு, மணமகன் விகாஸ் ஒவ்வொரு சகோதரிக்கும் நெற்றியில் குங்குமம் இடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் இரு வீட்டாரின் பெற்றோரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் இந்த விசித்திரமான முடிவுக்குக் காரணம் குறித்து சகோதரிகள் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'நாங்கள் சிறுவயதிலிருந்தே ஒன்றாகவே வளர்ந்து வந்துள்ளோம். ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எங்கள் குடும்பத்தினர் எங்களுக்குத் தனித்தனியாகத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டதை அறிந்தபோது, நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம். திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்பதை உணர்ந்தபோது, நாங்கள் எங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குச் சென்றோம். பின்னர், இறப்பதற்குப் பதிலாக, நாங்கள் மூவரும் ஒன்றாக இருந்து ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்' என்று தெரிவித்தனர்.
இந்த யோசனைக்கு, கடந்த 6 மாதங்களாக அவர்களுக்கு கேமரா மேனாகப் பணியாற்றி வந்த விகாஸ் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து விகாஸ் கூறுகையில், 'அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், அவர்களின் உணர்வுகளை மதித்து இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விசித்திர திருமணம் குறித்து இதுவரை காவல்துறையிடம் முறைப்படியான புகார் எதுவும் வரவில்லை என்றும், மணப்பெண்களின் பெற்றோரும் இந்த முடிவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஏதேனும் புகார் அளிக்கப்பட்டாலோ அல்லது தண்டனைக்குரிய குற்றம் கண்டறியப்பட்டாலோ, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரிகள் மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட இந்தச் சம்பவம், அப்பகுதியில் மட்டுமல்லாது இணையத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர்களின் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
