பாஜகவுக்கு நாடும் நாட்டு மக்களுமே எப்போதும் முதன்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது சிறந்த உதாரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
'பாஜகவுக்கு நாடும் நாட்டு மக்களுமே என்றும் பிரதானம் என்பதற்கு பிரதான் பதவி விலகலே சிறந்த உதாரணம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும். பாஜக தொண்டர்களுக்கு பதவியை விட நாடு, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்தான் முக்கியம். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, அந்தக் கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். மோடி அரசு நாட்டின் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான அவசியமான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும்.'
மேலும் அவர் தனது பதிவில், 'வளர்ந்த இந்தியா என்ற இலக்கில் தர்மேந்திர பிரதானின் பணிக்காலம் அவரது அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. வினாத்தாள் கசிவுகளில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக மோடி ஜி எடுத்த முடிவுகள் பாராட்டத்தக்கவை. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்த நடவடிக்கைகள் முழுமையான நீதியை உறுதி செய்யும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திரு தர்மேந்திர பிரதான் ஜி அவர்கள் தமது பதவிக்காலத்தில், தேசிய கல்விக் கொள்கையை (NEP) திறம்படச் செயல்படுத்துதல், தாய்மொழிகளில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள், பிஎம் ஸ்ரீ பள்ளிகளின் விரிவாக்கம், டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்-கல்வித்துறை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார் என்றும் அமித்ஷா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
