தமிழக அரசின் புதிய நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் இருந்து சமீபத்தில் மாநிலப் பணிக்குத் திரும்பிய கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இந்த புதிய பொறுப்பை ஏற்கிறார். ஓராண்டு காலத்திற்கு உருவாக்கப்பட்ட இந்தப் பதவிக்கு, தலைமைச் செயலாளர் கேடருக்கு இணையான அந்தஸ்தும், பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, ராஜேஷ் லக்கானி அந்தத் துறையின் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மத்திய அரசுப் பணியில் இருந்து தற்போது தமிழகத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மீது எழுந்திருக்கும் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் முழுமையான பின்னணி ராஜேஷ் லக்கானிக்கு நன்கு தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த நியமனம், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ராஜேஷ் லக்கானியிடமிருந்து முழுமையான தகவல்களைப் பெற்று, வழக்கை மேலும் வலுப்படுத்தி செந்தில் பாலாஜியை சட்டரீதியாக எதிர்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நியமனம் தமிழக நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
