தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அருணாசலம் (24) என்ற வாலிபரின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று நிறைவடைந்தது. குற்றவியல் நீதித்துறை நடுவரின் விசாரணைக்குப் பிறகு, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜனின் மகனான அருணாசலம், தூத்துக்குடி 3ஆம் மைல் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை 17ஆம் தேதி, டாஸ்மாக் கடை மூடப்பட்ட பிறகு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக அருணாசலத்தை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 120 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம், அங்கு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட போலீசார், உடனடியாக அருணாசலத்தின் தாயார் பரமேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அருணாசலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 23) காலை அருணாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் தாக்கியதாலேயே தனது மகன் உயிரிழந்ததாக அருணாசலத்தின் பெற்றோர் குற்றம்சாட்டி, அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த வாலிபர் அருணாசலத்தின் உடலுக்கு இன்று காலை 7.10 மணியளவில் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மூன்று மாவட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு இந்த பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை நிறைவடைந்த பின்னர், குற்றவியல் நீதிமன்ற நடுவரின் விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு, அருணாசலத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், தனது மகனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அருணாசலத்தின் தாயார் பரமேஸ்வரி, மாஜிஸ்திரேட்டிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
