நீட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் 34 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர் நடிகைகள், முன்னணி நட்சத்திரங்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிவதாகவும், அவர்கள் மீண்டும் இதுபோன்ற ஏமாற்றங்களுக்கு ஆளாகாதவாறு பார்த்துக்கொள்வது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'என் தந்தை ஒரு பேராசிரியராக இருந்தார். அவர் பல இளம் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தார். அவர் எனக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்த ஒரு முக்கியமான பாடம் இதுதான்: 'தோல்வி அடைவதில் தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.'
மேலும் அவர், 'சமூகத்தில் முதிர்ந்த குடிமக்களாக, நமது கலாச்சாரத்தை வடிவமைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. உழைப்பை விட முடிவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சமூகம், தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதை விடுத்து குறுக்கு வழிகளையே நாடும். தங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது மாணவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே; அதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் அவர்களுக்கு அத்தகைய உணர்வு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இளம் இந்தியர்கள் கனவுகளாலும் ஆற்றலாலும் நிறைந்தவர்கள் என்றும், அவர்களே நமது வெற்றியின் உந்துசக்தியாக திகழ்கிறார்கள் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகத்தினர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும், நமது இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் ஆற்றலுடனும் இருப்பதை உறுதி செய்வதில் பெரும் பொறுப்பையும் வெவ்வேறு பங்குகளையும் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும், நேர்மை ஊக்குவிக்கப்படும் மற்றும் தகுதிக்கு வெற்றி கிடைக்கும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வுகளை நாம் அனைவரும் கண்டறிவோம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது,' என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு, இந்த விவகாரத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
