தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற கோட்டை அம்மன் ஆடித் திருவிழா இன்று (20/07/2026) மேடை போடுதல் நிகழ்வுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த 15 நாள் திருவிழாவின் போது மட்டுமே பக்தர்கள் அம்மனை நேரடியாக தரிசிக்க முடியும். மற்ற நாட்களில், கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பீடத்திற்கு மட்டுமே வழிபாடு நடைபெறும்.
ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் என்றாலும், தேவகோட்டை கோட்டை அம்மன் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா, ஆடி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று, மேடை போடுதல் நிகழ்வுடன் இனிதே ஆரம்பமானது. திருவிழா காலங்களில் மட்டுமே அம்மனை நேரடியாக தரிசிக்க முடியும் என்பதால், அதுவரை கோவிலில் உள்ள பீடத்திற்கு மட்டுமே பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
வருடம் முழுவதும் நீரில் இருக்கும் அம்மனுக்கு, ஊரணியில் இருந்து மண் எடுத்து வந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்கள். அதன் பிறகு, ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். செவ்வாய்க்கிழமைகளில் கூட, மேடையில் உள்ள பீடத்திற்குத்தான் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மனுக்கும் சிறப்பு ஆராதனைகளும் அர்ச்சனைகளும் உண்டு.
இந்தக் கோவில் தேவகோட்டை நகரத்தார்களின் 40 பிரிவுகளைச் சேர்ந்த 130 புளிகளுக்குச் சொந்தமானது. கோவிலின் நிர்வாகம் 5 அறங்காவலர்களால் 2 வருட காலத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு அம்மனுக்கு கழுத்துரு (திருமாங்கல்யம்) சார்த்தும் வேண்டுதல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் இந்த வேண்டுதலை நிறைவேற்ற, அலுவலகத்தில் பணம் செலுத்தி கழுத்துருவை பெற்று அம்மனுக்கு அணிவித்து ஆராதிக்கிறார்கள்.
தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் மேடை மிகவும் விசேஷமானது. கர்ப்பகிரகத்தில் எப்போதும் மேடை மட்டுமே இருக்கும். இந்த திருவிழாவின் போதுதான் அம்மன் ஊருக்குள் பிரவேசித்து 15 நாட்கள் தங்கி இருப்பார்கள். தேவகோட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் இந்த சக்தி மிக்க அம்மன், இக்காலகட்டத்தில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழா நாட்களில், ஆற்றில் இருந்து குடங்களில் நீர் எடுத்து, ஆற்றங்கரைக் கோவிலில் வைத்து, தென்னம் பாளையை அதில் இட்டு அம்மனை ஆவாகனம் செய்து இங்கு கொண்டு வந்து வைப்பார்கள். அம்மனுக்கு நேரில் வெளியில் அமைந்திருக்கும் மேடைக்கு பால், மஞ்சள், குங்குமம் மற்றும் பல்வேறு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும்.
ஊரின் வெளியே ஆற்றங்கரையில் அம்மனின் பழங்கால கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்படும். நினைத்ததை முடித்துக் கொடுக்கும் அம்மனாக இவர் விளங்குகிறார். இங்கு வீடு, விமானம், கால், கை, கண்மலர், உடம்பு, பாம்பு போன்ற பல்வேறு வேண்டுதல் பொருட்கள் அர்ச்சனை டிக்கெட் கொடுக்கும் இடத்தில் கிடைக்கும். பக்தர்கள் பணம் கட்டி இந்த பொருட்களை வாங்கி, தட்டில் வைத்து அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யும்போது, அதை அம்மனிடம் வைத்து பூஜை செய்து தருவார்கள். பின்னர் அப்பொருளை திரும்பப் பெற்று, நம் வேண்டுதலுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் வைத்து வழிபட, அடுத்த ஆண்டுக்குள் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்த அம்மனை இந்து மதத்தினர் மட்டுமல்லாமல், வேறு மதத்தினரும் நாடி வருகிறார்கள். ஊரின் காவல் தெய்வம் என்பதாலும், அவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதாலும், அம்மனின் சக்தியை உணர்ந்ததாலும் மக்கள் ஒற்றுமையாக வழிபடுகின்றனர். திருவிழா முடியும் வரை, இந்து மதத்தினர் மட்டுமல்லாமல் மற்ற மதத்தினரும் அசைவம் சமைப்பதில்லை. இந்து மதத்தினர் சமையலில் கடுகுகூட தாளிப்பதில்லை. மேலும், 15 நாட்களுக்கு மக்கள் உணவுப் பொருட்களை வறுக்க மாட்டார்கள். இது அம்மனின் வெப்பத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விழா முடிந்ததும், அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் குளத்தில் மூழ்கி வெப்பத்தைக் குறைப்பதாக ஐதீகம்.
பொதுவாக அம்மன் கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவது வழக்கம். ஆனால் தேவகோட்டை கோட்டை அம்மன் வழிபாடு மிகவும் வித்தியாசமானது. இங்கு யாரும் எந்த பலியையும் கொடுப்பதில்லை. மேலும், விழா நடக்கும் நாட்களில் தேவகோட்டை நகருக்குள் அனைத்து கோழி, ஆடு இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். தேவகோட்டை எல்லையான ஆற்றுப்பாலத்தைக் கடந்த பின்னரே இறைச்சிக் கடைகள் செயல்படும். இந்த 15 நாட்களிலும் நகருக்குள் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருப்பது மிகவும் வித்தியாசமான மரபாகும். வேறு எந்த ஊரிலும் இது போன்ற நிகழ்வு இல்லை. எனவே, பக்தர்கள் மட்டுமல்லாமல், ஊர் மக்களும் கோட்டை அம்மனை ஒற்றுமையுடன் வழிபட்டு வருகின்றனர். இறைச்சிக் கடை வைத்திருப்பவர்கள் பலர் வேறு மதத்தினராக இருந்தாலும், அனைவரும் இந்த மரபைக் கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது. தேவகோட்டை மாநகரில் வருடா வருடம் விமரிசையாக நடைபெறும் கோட்டை அம்மன் கோவில் ஆடித்திருவிழா இன்று தொடங்கி 15 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
