சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன் என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் வன்னிஅரசு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்' என்று விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார். இது வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களைப் போன்ற பலரும் முதலமைச்சர் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தை மக்களுக்கான சேவையாகப் பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதுவதாலேயே, தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்படுவதாக அமைச்சர் வன்னிஅரசு சுட்டிக்காட்டினார். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியிருப்பதால், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வன்னிஅரசு வலியுறுத்தியுள்ளார். 'எலும்புகள் எல்லோருக்கும் உண்டு' என்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
