ஆடி மாதத்தின் முதல் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பல பகுதிகளில், சிறப்பு வாய்ந்த இந்த நாளில் தேங்காய் சுட்டு அம்மனுக்குப் படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. ஆடி மாதம் சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால், இந்த மாதத்தில் விதை விதைக்கும் முறையை முன்னோர்கள் கடைப்பிடித்தனர். இதுவே 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற பழமொழி உருவாகக் காரணம்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு மிகவும் உகந்ததாக இருக்கும் தட்சிணாயண காலத்தில் (ஆடி மாதம்) சூரியனின் ஒளிக்கதிர்கள், உத்திராயண காலத்தை விட விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும், சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தி, தெய்வங்களை, குறிப்பாக அம்மனை வழிபட்டு, மன அமைதியை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் ஒரு சிறந்த காலமாக கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் வேப்பிலையை அம்மனுக்குச் சாற்றி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழாக்கள் நடத்துவதும் வழக்கமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபாரமான மருத்துவ மற்றும் தெய்வீக குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும் என்பதால், எளிதில் ஜீரணிக்கக்கூடிய கூழ் போன்ற உணவுகளை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
துர்க்கை, காளி போன்ற பெண் தெய்வ வழிபாட்டிற்கு ஆடி மாதம் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இதேபோல், 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழாவும் மிகவும் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாகலட்சுமி பூஜை, வரலட்சுமி நோன்பு போன்ற தினங்களில் விரதம் இருந்து அம்மனை தரிசிப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.
குறிப்பாக, கோவை, கரூர், திருப்பூர், சேலம் ஆகிய கொங்கு மண்டலப் பகுதிகளில் ஆடி முதல் நாளன்று தேங்காய் சுட்டுப் படைக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. இது மகாபாரதப் போருடன் தொடர்புடையதாகப் புராணங்கள் கூறுகின்றன. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெற்ற மகாபாரதப் போர் ஆடி மாதம் முதல் நாள் தொடங்கி, 18 நாட்கள் நடைபெற்று ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என மக்கள் விநாயகர் மற்றும் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டி, தேங்காயைச் சுட்டுப் பிரசாதமாகப் படைத்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், புதியதாகத் திருமணமான தம்பதியர், தீய எண்ணங்களை அகற்றி, நல்ல எண்ணங்களுடன் மகிழ்ச்சியான வாழ்வைத் தொடங்கவும், செல்வம் பெருகவும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் குத்துவிளக்கை லட்சுமியாகக் கருதி அலங்கரித்து வழிபடுவது, அம்மனுக்குப் பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குவது மேன்மையை அளிக்கும். அம்மனை வழிபடும்போது லலிதாசகஸ்ர நாமம் சொல்வதும், ஆடி மாதத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை வீட்டிற்கு வரவழைத்து வழிபடுவதும் சிறப்பைத் தரும்.
ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சிலர் தவறாகக் கருதுவது அறியாமையால் வந்த பழக்கமாகும். உண்மையில், இது 'பீட மாதம்' என்பதே சரியான பெயர். அதாவது, மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே இதன் பொருள். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களைத் தரும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்குச் சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும். மேலும், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து விநாயகரைப் பூஜிக்க செல்வம் கொழிக்கும். வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும்போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாகப் பாவித்து உணவு கொடுத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
