ராய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபி போட்டிக்கு முன்பாக, நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பயிற்சியை நிறுத்தி, சிஎஸ்கே வீரர் உர்வில் படேலின் அதிரடி ஆட்டத்தை வியப்புடன் பார்த்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக உர்வில் பட்டேல் அடித்த அந்த அற்புதமான ஆட்டம், சென்னை அணிக்கு ஒரு முக்கியமான வெற்றியைத் தேடித் தந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருந்தது. அப்போது, தனது வார்ம்-அப் பயிற்சியின் நடுவே ஓய்வெடுத்து தண்ணீர் குடிக்க வந்த கோலி, டிவி திரையில் உர்வில் படேலின் அதிரடி ஆட்டத்தின் மறுஒளிபரப்பைக் கண்டார்.
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில், உர்வில் படேலின் பேட்டிங் காட்சி, கோலியை சற்றே நிறுத்தியது. ஒரு சிறு இடைவேளைக்காக வந்தவர், தனது கவனத்தை முழுவதும் உர்வில் ஆட்டத்தின் மீது செலுத்தி நீண்ட நேரம் அதைப் பார்த்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக உர்வில் படேல் ஒரு அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 13 பந்துகளில் அரை சதம் அடித்து, ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை சமன் செய்தார். மேலும், ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
உர்வில் படேல் 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளைக் கைப்பற்ற இந்த அதிரடி ஆட்டம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.
வெறும் 11 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் சென்னை அணி தனது நிலையை மேம்படுத்தியிருந்தது. உர்வில் படேலின் அதிரடிக்கு ஷிவம் துபே (7 பந்துகளில் 15 நாட் அவுட்), பிரசாந்த் வீர் (12 பந்துகளில் 17 நாட் அவுட்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டமும் பக்கபலமாக அமைந்தது. இதன்மூலம் 204 ரன்கள் என்ற இலக்கை நான்கு பந்துகள் மீதமிருக்க சென்னை அணி வெற்றிகரமாக துரத்தியது.
சஞ்சு சாம்சன் 28 ரன்கள் அடித்து சென்னை அணிக்கு ஒரு விரைவான தொடக்கத்தை அளித்தார். அதற்குப் பிறகு, உர்வில் படேல் லக்னோ பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவர், டிக்வேஷ் ரதி, ஆவேஷ் கான் போன்ற பந்துவீச்சாளர்களை குறிவைத்துத் தாக்கினார், மேலும் அனுபவமிக்க முகமது ஷமியையும் விட்டுவைக்கவில்லை.