ஜெய்ப்பூர்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 230 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேஸ் செய்த போது, 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி காட்டிய அதிரடி குஜராத் டைட்டன்ஸ் அணியை ஒரு நிமிடம் மிரள வைத்தது. ஆனால், எல்லையில் நின்றிருந்த பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா செய்த ஒரு சிறு சைகை, ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியது. அந்த ரகசியத் திட்டம் என்ன? சிராஜ் அதை எப்படி கச்சிதமாகச் செயல்படுத்தினார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் குஜராத் நிர்ணயித்த 230 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது. கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராகவே 35 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி, இம்முறையும் அதே வேகத்தில் ஆட்டத்தைத் தொடங்கினார். முகமது சிராஜ் வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்ட அவர், சிராஜின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 15 பந்துகளில் 36 ரன்கள் குவித்து வைபவ் அசுர வேகத்தில் முன்னேறியபோது, குஜராத் அணி தோல்வி அடையுமோ எனத் தோன்றியது.
அப்போதுதான் குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தனது ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தை வெளியிட்டார். எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றிருந்த நெஹ்ரா, சிராஜை அழைத்து தனது தலையைத் தொட்டு ஒரு சைகை காட்டினார். “பவுன்சர் பந்துகளை வீசி பேட்ஸ்மேனை நிலைதடுமாறச் செய்” என்பதுதான் அந்த ரகசிய சிக்னல். அனுபவ வீரரான சிராஜ், பயிற்சியாளரின் திட்டத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார்.
ஆட்டத்தின் 3வது ஓவரின் கடைசி பந்தை சிராஜ் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டார். சுமார் 146.6 கி.மீ வேகத்தில் ஒரு மிரட்டலான பவுன்சர் பந்தை வைபவ்வை நோக்கி வீசினார். அந்த அசுர வேக பவுன்சரை சற்றும் எதிர்பாராத வைபவ், தற்காப்பு ஆட முயன்றபோது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு உயரே எழும்பியது. அங்கு நின்றிருந்த அர்ஷத் கான் மிக எளிதாக கேட்ச் பிடிக்க, ராஜஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் வைபவ் வெளியேறினார். தனது திட்டத்தை சரியாக முடித்த சிராஜ், ஆக்ரோஷமாக கத்தியபடி கொண்டாடியது மைதானத்தையே அதிர வைத்தது.
வைபவ் ஆட்டமிழந்த பிறகு ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது, ராஜஸ்தான் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆட்டமிழந்தாலும் 11 போட்டிகளில் 440 ரன்கள் குவித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, ஆரஞ்சு கேப் பட்டியலில் தற்போது 5வது இடத்தில் நீடிக்கிறார். பயிற்சியாளர் நெஹ்ராவின் அந்த ஒரு சிக்னல், ஒரு மாபெரும் வெற்றியை குஜராத் அணிக்குத் தேடித்தந்துவிட்டது.