தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாகவும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நெல்லை இரட்டைக் கொலை சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள், கோவையில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மேலும், விருதுநகர் மாவட்டம் அருகே திமுக கொடி கட்டிய கார் மூலம் ஒரு சிறுமியைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பட்டப்பகலில் பொதுவெளியில் யார் வேண்டுமானாலும் தாக்கப்படலாம், கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு இவ்வளவு மோசமாக சீரழிந்து கிடப்பதையும், அதை ஜோசப் விஜய் அரசு வேடிக்கை பார்ப்பதையும் ஏற்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, திமுக ஆட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கே பொதுவெளியில் பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் முதல்வர் விஜய் இருப்பது, அவரது நிர்வாகத் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். 'மாற்றம்' வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு தினந்தோறும் உயிர்ப் பயத்தைக் காட்டுவது மன்னிக்க முடியாத செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கை சரிசெய்வதில் முதல்வர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தவறு செய்பவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
