இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்று வரும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 15 வயதிலேயே இந்திய அணிக்குத் தேர்வாகி அனைவரையும் கவர்ந்துள்ளார். இருப்பினும், அவர் இன்னும் தனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடவில்லை.
வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான வளர்ச்சியைப் பாராட்டியுள்ள சாம் கரன், அவரது இந்த கிரிக்கெட் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார். தற்போது இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் இடம் பெற்றுள்ள நிலையில், அவரது சர்வதேச அறிமுகத்திற்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
மான்செஸ்டரில் நடைபெற்ற 2வது டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சாம் கரன், 'நிச்சயமாக இது ஒரு நம்ப முடியாத கதை. நான் ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தபோது, இந்த இளம் வீரரின் பேட்டிங் மிகவும் எளிதாக இருந்தது. அவருக்குக் கிடைக்கும் கவனம் முற்றிலும் தகுதியானது தான்' என்று கூறினார். மேலும், 'அவர் மிகவும் எதார்த்தமாகவும், தனது வாழ்வின் மிகச் சிறந்த தருணத்தை அனுபவித்தும் விளையாடி வருகிறார். 15 வயதில் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது ஒரு மிகச்சிறந்த விஷயம். ஒரு எதிரணியாக இருந்தாலும், அவரது திறமையை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். நான் 15 வயதாக இருந்தபோது சர்ரே உள்விளையாட்டு அரங்கில் பந்துகளைத் தட்டிக்கொண்டு தான் இருந்தேன்' என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
இங்கிலாந்து ஆடுகளங்கள் இந்திய ஆடுகளங்களை விட மெதுவாக இருக்கும் என்றும், இது வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு புதிய சவாலாக அமையும் என்றும் சாம் கரன் குறிப்பிட்டார். 'இங்கு ஒவ்வொரு அணியும் தங்களுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படும். எங்களிடமும் அவருக்கென்று சில திட்டங்கள் உள்ளன. அவை சரியாக அமையுமா என்று இப்போதே கூறிவிட முடியாது, ஏனென்றால் அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். என்னைப் பொறுத்தவரை நான் எனது திறமைகளைச் சரியாகப் பயன்படுத்த முயல்வேன். ஆனால் அவர் செய்து வரும் காரியங்கள் உண்மையில் ஸ்பெஷலானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.
மைதானத்திற்கு வெளியே இருக்கும் அழுத்தங்களை வைபவ் எவ்வாறு கையாளப் போகிறார் என்பது குறித்தும் சாம் கரன் சில ஆலோசனைகளை வழங்கினார். 'இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அந்தப் புகழை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதுதான் அவரது மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவர் ஓரிரு ஐபிஎல் சீசன்களை மட்டுமே விளையாடிவிட்டு, தற்போது நேரடியாக இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவ அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் உடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று அவர் கூறினார்.
இறுதியாக, வைபவ் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று வாழ்த்திய சாம் கரன், 'அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது ஆட்டத்தை ரசித்துப் பார்க்க ஆவலாக உள்ளேன். ஆனால், அது எனது பந்துவீச்சிலோ அல்லது எங்கள் அணிக்கு எதிராகவோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார். இந்த கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.