சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், மத்திய கிழக்கு போர் சூழலில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட எரிபொருளை இந்திய நிறுவனங்கள் சுத்திகரிப்பதால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைய வாய்ப்பில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் 30 வரை அடக்க விலையை விட குறைவான விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி-யை விற்பனை செய்ததால், சுமார் 74,781 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. இதனால், அடுத்த சில வாரங்களுக்கு கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏதும் ஏற்படவில்லை என்றும், அதிக தேவை இருந்தபோதிலும் விநியோகத்தில் எந்த இடையூறும், பற்றாக்குறையும் இல்லை என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் 2022 முதல் 2026 வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 5.58% மற்றும் 6.23% உயர்ந்தாலும், நுகர்வோருக்கு எந்த விலை உயர்வும் ஏற்படவில்லை. நமது நிதி அமைப்பு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தை ஏற்றுக்கொண்டது என்றும் அவர் விளக்கமளித்தார்.