இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் (ETPL) டப்ளின் கார்டியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த கட்டமாக இந்த புதிய பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ராகுல் டிராவிட்டிற்கு சொந்தமான இந்த அணியை வழிநடத்தும் அஸ்வின், உள்நாட்டு கிரிக்கெட்டில் தான் ஏற்கனவே இதே போன்ற பணிகளை வெற்றிகரமாக செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்றபோது, கேப்டன் மற்றும் மெண்டர் பொறுப்புகளை அவர் திறம்பட இணைத்துச் செயல்பட்டார். மேலும், ஐபிஎல் தொடரில் 28 போட்டிகளில் கேப்டனாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
'ஒரு வீரராக மட்டும் இல்லாமல், கிரிக்கெட்டில் கூடுதல் பங்களிப்பை வழங்க விரும்பும் ஒரு காலகட்டத்தில் நான் இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக செயல்பட்டு வருகிறேன். இதை ராகுல் டிராவிட் கவனித்து, என்னால் இந்த பொறுப்பை ஏற்க முடியும் என்று நம்பினார். இது நான் அடுத்து செய்ய விரும்பும் மாற்றத்திற்கான ஒரு தொடக்கமாகும்,' என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
டப்ளின் அணியின் உரிமையாளராக ராகுல் டிராவிட் இருந்தாலும், களத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் அவர் தலையிடமாட்டார் என்றும், கிரிக்கெட் செயல்பாடுகள் அனைத்தையும் அஸ்வினிடம் முழுமையாக ஒப்படைத்துள்ளதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். 'ஒரு கிரிக்கெட் அணியை வழிநடத்தும்போது சுதந்திரம் மிகவும் முக்கியமானது. கிரிக்கெட் சார்ந்த முடிவுகளில் தலையிட விரும்பவில்லை என்பதில் ராகுல் தெளிவாக இருக்கிறார். அணியை உருவாக்குவதற்கும் வழிநடத்துவதற்கும் நான் முழுப் பொறுப்பேற்பேன்,' என அவர் மேலும் கூறினார்.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்படவுள்ள நிலையில், இதுபோன்ற தொழில்முறை லீக்குகள் வெளிநாட்டு வீரர்களின் அனுபவத்தையும் திறமையையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், அசோசியேட் நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது வீரர்களுக்கு நெருக்கடியான சூழலிலும் சிறப்பாக விளையாட ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும், டி20 கிரிக்கெட் நிலைத்து நிற்கக்கூடியது என்றும், இது போன்ற லீக்குகள் கிரிக்கெட்டை ஒரு உண்மையான சர்வதேச விளையாட்டாக மாற்ற உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.