2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சஞ்சு சாம்சன், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தனது சீரற்ற ஆட்டத்தால் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
டர்ஹாமில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், 7 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்பாக அயர்லாந்துக்கு எதிரான தொடரிலும் முறையே 5 மற்றும் 0 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார். அவரது இந்தத் தொடர் தோல்விகள், அணியில் அவருக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய பலவீனமாக அவரது சீரற்ற பேட்டிங் இருந்து வருகிறது. வெளிநாடுகளில் விளையாடிய தனது கடைசி 10 டி20 இன்னிங்ஸ்களில், 8 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இது அவரது திறமை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உலகக் கோப்பையில் அவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம் காரணமாக, அணி நிர்வாகம் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
உலகக் கோப்பையில் 97*, 89, 89 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற சாம்சன், அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ தொடர்ந்து மூன்று போட்டிகளில் 20 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை என்ற புள்ளிவிவரமும் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் 2 சதங்கள் மற்றும் 1 அரைசதம் அடித்த போதிலும், அவரால் 500 ரன்களைக் கடக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.