மகாத்மா காந்தியின் பெயரிலேயே 125 நாள் திட்டம் தொடர வேண்டும் என்றும், திட்ட விதிகள் சிலவற்றில் மாற்றங்களும் தளர்வுகளும் அவசியமாகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
விஜய் எழுதியுள்ள கடிதத்தில், 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டமானது' நிதி பகிர்வு முறையைப் பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதலின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள், நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தைக் கட்டாயமாக்குகிறது. இதனால், தமிழகத்திற்கு ரூ.5000 கோடிக்கு மேல் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. எனவே, நிதிப் பகிர்வை 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு மத்திய அரசு 100% நிதியுதவியை தொடர வேண்டும்.
திட்டப் பணிகளை உரிய காலத்தில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, திட்டங்களை அறிவிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் பெயரிலேயே இத்திட்டம் தொடர வேண்டும் என்பதும் அவரது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
இந்தக் கோரிக்கைகள் மூலம், தமிழகத்தின் நிதிச் சுமையைக் குறைக்கவும், திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இதற்கு சாதகமான பதிலை அளிக்கும் என நம்புவதாக கடிதத்தில் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.