இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட காப்புரிமை வழக்கில், டெல்லி ஐகோர்ட்டு தற்போதுள்ள இடைக்கால தடையை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை ரத்து செய்ய முடியாது என்றும், அது தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
'அன்னக்கிளி', '16 வயதினிலே' போன்ற திரைப்படங்களில் இடம்பெற்ற 134 பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் காப்புரிமை தொடர்பாக, சரிகமா நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் உரிமை தங்களுக்கு சொந்தமானது என மனுவில் சரிகமா நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, வழக்கு இறுதி முடிவு எட்டும் வரை, சம்பந்தப்பட்ட பாடல்களையும் இசைப் படைப்புகளையும் இளையராஜா பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இளையராஜாவின் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க முடியாது என்றும், அது தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் டெல்லி ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.