சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, ரேசன் கடைகளில் எடை குறைபாடு இல்லாமல் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்கள் குறித்து கல்வித்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத் துறை சார்பில் போதை மறுவாழ்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார். பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் ஆட்சியர்கள் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும். பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறைகள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கோயில் மற்றும் அரசியல் நிகழ்வுகளின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுக்க வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் மக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பெரும்பாலான குற்றங்களுக்கு நில தகராறுகளே முதன்மைக் காரணம் என்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் நில வழக்கு தீர்வு குழுவை 2 வார இடைவெளியில் கூட்ட வேண்டும். புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் மற்றும் சுரண்டலை அனுமதிக்கக் கூடாது. சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார். 'மக்களிடம் செல்வதே' நமது தாரக மந்திரம் என அவர் குறிப்பிட்டார்.